உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்? RTI மூலம் வெளியான முக்கிய தகவல்!
கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், திமுக கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டினால் ஓரளவுக்கு பயன் அடைந்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கோடு பட்டியலின மக்களிடையே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை 2009-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு கொண்டு வந்தது.
அதுவரையிலும் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில் முழுமையாக பலனை அடையாத சமூகமாக அருந்ததியர் சமூகம் இருந்து வந்தது. இதனை, அப்பொழுது ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் உறுதிப்படுத்தியிருந்தது.
உள் ஒதுக்கீட்டால் பலன் அடைந்தனரா அருந்ததியர்கள்?
திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உள் ஒதுக்கீட்டினால் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாத அருந்ததியர் சமூக மக்கள், ஓரளவுக்கு தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்று பயன் அடைந்ததாக தரவுகள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக, மருத்துவக் கல்வியில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-19-ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன.
2023-2024-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள். பல் மருத்துவ படிப்பை பொறுத்தவரை 2018-2019 ஆண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் அருந்ததியர் சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 16 இடங்களாக இருந்துள்ளன.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை கூட முழுமையாக பூர்த்தி செய்ய இயலாமல், 1.5 விழுக்காடு அருந்ததியர் சமூக மாணவர்கள் மட்டுமே பல் மருத்துவம் பயின்றார்கள். இந்த நிலை, 2023-24- ஆம் ஆண்டு, பெரிய அளவில் மாற்றம் கண்டது. 1.737 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் 54 இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான 3 விழுக்காடு பிரதிநிதித்துவம் முழுமையாக கிடைத்ததாக தரவுகள் கூறுகின்றன.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை 2009-10 ஆம் ஆண்டில் 1,193 இடங்களை பெற்றிருந்த அருந்ததியர் நிலை. 2023-24 ஆம் ஆண்டில் 3,944 இடங்களை பெற்று உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியர் பிரிவு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் 2016-17 ஆம் ஆண்டு, வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். இதர பட்டியலின சமூக மக்கள் 84 விழுக்காடு பயனடைந்து வருகின்றனர்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. உள் ஒதுக்கீட்டினால் அருந்ததியர் பயன் அடைந்திருப்பது தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
திராவிட இயக்கமும் இட ஒதுக்கீடும்:
நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டு, இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. 1928-ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது.
இதனால், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைத்தது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை கல்வி, பொருளாதார. சமூக, அரசியல் தளத்தில் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

