![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annamalai: மதுவால் அதிகரிக்கும் மரணங்கள் - என்ன சொல்லி சமாளிக்கப்போகிறது அரசு?- அண்ணாமலை கேள்வி
Annamalai: டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை அருந்தியதால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தமிழ்நாடு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
![Annamalai: மதுவால் அதிகரிக்கும் மரணங்கள் - என்ன சொல்லி சமாளிக்கப்போகிறது அரசு?- அண்ணாமலை கேள்வி Annamalai: Increasing deaths due to alcohol - what will the government say and deal with Annamalai: மதுவால் அதிகரிக்கும் மரணங்கள் - என்ன சொல்லி சமாளிக்கப்போகிறது அரசு?- அண்ணாமலை கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/9ca978b958d3a1788c7f3f285117772e1676119844410333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூரில் கள்ள மது அருந்தி 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இறந்த 2 பேரும் அருந்திய மதுபாட்டிலில் சயனைட் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
மது அருந்தி 2 பேர் உயிரிழப்பு:
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் விற்கப்பட்ட கள்ள மதுபானத்தை அருந்திய கீழவாசலை சேர்ந்த குப்புசாமி, விவேக் உயிரிழந்தனர். இதனிடையே, மதுபானத்தில் உள்ள பிரச்னைதான் இதற்கு காரணம் என்பது தகவல் பரவியது. இதனால், எதிரே இருந்த மீன் வியாபாரிகள், பாஜகவினர், பொதுமக்கள் மதுக்கூடம் முன் திரண்டு மதுக்கூடத்தில் இருந்த பணியாளர்களிடம் தகராறு செய்தனர்.
அப்போது, அங்கு வந்த டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளரை பொதுமக்கள் தாக்கியதில், அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இவரை காவல் துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக வந்த டாஸ்மாக் தனி வட்டாட்சியர் ஆர். தங்க பிரபாகரனை பொதுமக்கள் மதுக்கூடத்துக்குள் தள்ளி கதவை மூட முயற்சித்தனர். இதை பார்த்த காவல் துறையினர் சென்று, தகராறில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி, வட்டாட்சியரை மீட்டனர். பின்னர், மதுக்கடையையும், மதுக்கூடத்தையும் காவல் துறையினர் மூடி பூட்டு போட்டனர்.
தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்தினர் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியர் காமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் , தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது.
16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)