NEET Suicide: தொடரும் நீட் சோகம்... தேர்வு பயத்தில் சேலம் மாணவி தற்கொலை
நீட் தேர்வுக்கு படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மருத்துவ படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பெரிய முத்தியம்பட்டியில் வசிக்கும் செல்வராசு - சந்தரா தம்பதி. இவர்களது மகள் சத்தியா (18 வயது) கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். தேர்வின் முடிவில் 562 மதிப்பெண் பெற்று உடனே நடைபெற்ற நீட் தேர்வு எழுதி அதில் 333 மதிப்பெண் மட்டுமே எடுத்து மருத்துவ படிப்பிற்கு சேர முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜலகண்டாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த வாரம் சத்யா தனது தாயார் சந்திராவிடம் நீட் தேர்வுக்கு படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மருத்துவ படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக தாய் தந்தை இருவரும் படிக்க முடியவில்லை என்றால் வேறு ஏதேனும் படிப்பு தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சத்தியா கடந்த மார்ச் 31ஆம் தேதி இரவு விஷம் அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த மாணவியிடம் கேட்டபோது நீட் தேர்வு தோல்வி பயத்தினால் விஷம் அருந்தி விட்டதாக தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர் உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சத்தியா பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி சத்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலறிந்த கொங்கணாபுரம் போலீசார் சத்தியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சத்தியாவின் பெற்றோர் கூறும்போது, மருத்துவ படிப்பு இல்லை என்றால் வேறு எத்தனையோ படிப்புகள் உள்ளது. தனது மகளை போல எந்த மாணவ, மாணவிகளும் இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என ஆழ்ந்த சோகத்துடன் தெரிவித்தனர்.
நீட் தேர்வு தோல்வி பயத்தினால் சத்தியா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

