திருமண நாளில் உயிரிழந்த மகன்... பள்ளி திறந்த 2 வது நாளில் நடந்த சோகம்... உறவினர்கள் போராட்டம்!
அரூர் அடுத்த தனியார் பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருப்பிளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பரசு-மகேஸ்வரி மகன் இன்பராஜ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தவுடன், மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளான். மாணவன் பள்ளியில் மிகவும் சோர்வாக இருந்திருக்கிறார். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், இதை பெற்றோருக்கு தெரிவிக்காமல், அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாணவனின் பெற்றோருக்கு திருமண நாள் என்பதால், தந்தை அன்பரசு, தனது குழந்தையை கோவிலுக்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்திருக்கிறார்.
ஆனால் பள்ளியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளிய வருவதை பார்த்த அன்பரசு, தனது மகனை தேடி வகுப்பறைக்கே சென்றுள்ளார். அப்போது மூன்று ஆசிரியர்கள் தன் மகன் முகத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருப்பதை பார்த்து, பதறிப் போய், ஓடி மகனை தூக்கி தட்டி பார்த்துள்ளார். அப்பொழுது மகன் பேச்சில்லாமல், மயங்கிய நிலையில் இருந்துள்ளான். தொடர்ந்து பதறி அடித்து தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமார் 2 மணி நேரம் சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் இன்பராஜ் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று பள்ளி நிர்வாகத்திடம் தன் மகனின் உடல்நிலை பற்றி ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று கேட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுக்க முயற்சித்தனர். அப்போது காவல் துறை, பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் பரபரப்பானது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் நடத்தினர். அப்பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த ஆண்டு பள்ளி தொடங்கிய 2-வது நாளில் ஐந்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள் "நிலத்தை புடுங்க பார்க்குறியா"
ட்ரெண்டிங் செய்திகள்






















