Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
விவாகரத்து கேட்ட மனைவியிடம், நீ அழகாக இருப்பதால் தானே வேலைக்கு செல்கிறாய் என கணவர் வாக்குவாதம் செய்து ஆசிட் வீசிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஆசிட் வீச்சால் பார்வையை இழந்த மனைவி அலறி ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 31 வயதான முகமது அலிக்கும் 29 வயதான சனா பாத்திமாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையிலான பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வந்த சனா பாத்திமா தனது குழந்தையுடன் அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அதோடு விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பியதால் கணவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் இருந்தவர்கள் திருமண விழாவுக்காக ஊருக்கு சென்ற போது சனா பாத்திமா வீட்டிற்கு வந்த முகமது அலி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அழகாக இருப்பதால் தானே வேலைக்கு செல்கிறாய், அதனால் தானே இப்படி தைரியமான முடிவை எடுக்கிறாய் என சொல்லி பாத்ரூம் க்ளீன் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து மனைவியின் முகத்தில் ஊற்றியிருக்கிறார்.
இதனால் வலி தாங்காமல் ஓடிய மனைவியை விடாமல் துரத்தியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முகமது அலியை பிடித்து அடித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சனா பாத்திமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் ஆசிட் ஊற்றியதால் இடது கண் தெரியவில்லை என மனைவி கண்கலங்க பேசியுள்ளார். இந்தநிலையில் தலைமறைவாகவுள்ள முகமது அலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விவாகரத்து கேட்ட மனைவி மீது கணவர் ஓட ஓட விரட்டி ஆசிட் ஊற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























