Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நான்கரை வயது மகனின் உயிரி பறிபோயுள்ளதாக பெற்றோர் கண்ணீர்மல்க பேசியுள்ளது பலரையும் கலங்க வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் கண்ணனூர் ஊராட்சியை சேர்ந்த செல்வராஜ் திவ்யா தம்பதி கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய நான்கரை வயது மகனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் காலை 11:30 மணியளவில் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களோ செவிலியர்களோ யாருமே இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ உதவியாளர் ஒருவர் மட்டும் இருந்ததால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து பதற்றமடைந்த பெற்றோர் சொந்த வானகத்திலேயே துறையூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் தனது மகன் உயிரோடு இருந்திருப்பான் என பெற்றோர் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சேர்த்து இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் தான் இருப்பதாகவும் தன்னுடைய குழந்தை போல வேறு எந்த குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது என பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.























