இரட்டை இலை கீழே... தாமரை மேல தான்.. பாஜக மாநிலத் துணைத்தலைவர் புதிய விளக்கம்
தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச தகுதி படைத்தவர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி.

சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, 2021 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த திமுக அரசு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத மாதா சிலையை இழுத்து பூட்டியது. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத் தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், திமுக அரசோ சுதந்திர போராட்ட தியாகிகளை மதிக்கவில்லை. ஒவ்வொரு இடங்களிலும் மாலையிட சென்ற போது இடையூறு செய்தனர். சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மாலை அணிவிக்க கூடாது என தடுக்கப்பட்டோம். தடையை மீறி, அதே நாளில் நாங்கள் மாலை அணிவித்தோம். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி வாழப்பாடியில் நடைபெற்ற இருசக்கர பேரணியின் போது என்னை கைது செய்தனர். மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, எனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். எனினும், ஐசியூவில் வந்து பென்னாகரம் மாஜிஸ்திரேட் என்னை ரிமாண்ட் செய்தார் என்றார்.
செந்தில் பாலாஜியின் செய்தியை திசை திருப்ப திமுக அரசு என்னை சிறையில் அடைத்தது, மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் என்னுடன் சிறையில் அடைத்தனர். உயர்நீதிமன்றத்தை அணுகி 11 நாட்களுக்கு ஜாமீன் பெற்றோம். வழக்கில் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டதாகவும், அதன் சேத மதிப்பு ரூ.600 எனவும் கூறி வழக்கு தொடுத்தார்கள். என் ஒருவனை சிறையில் அடைக்க ரூ.600 சேதம் எனக் கூறி, ரூ.30 லட்சம் செலவு செய்தது திமுக அரசு, ஆனால், அரசு சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என நிருபித்து, தன்னை வழக்கில் நீதிபதி விடுவித்துள்ளார். இந்த காலகட்டத்தில 36 முறை வாய்தா வாங்கப்பட்டது. பாரத மாதா சிலை என்பது தேசத்தின் கடவுள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், பாரத மாதா நினைவாலயம் என திமுக அரசு கூறி வருகிறது. இனியாவது இந்த அரசு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரத மாதா ஆலயம் என எழுதப்பட வேண்டும். இல்லையெனில், நாங்கள் வழக்கு தொடுப்போம். பாரத மாதா ஆலயம் எழுப்பவே, 6 ஏக்கர் நிலத்தை சுப்பிரமணிய சிவா வாங்கினார். அதன்படி, அதனை ஆலயமாக்க இந்த அரசு முன்வர வேண்டும். பாரத மாதாவுக்கு ஜெ. என்ற முழக்கம் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தேசம் காப்போம், தமிழகம் வெல்வோம் மாநாடு வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று கூறினார்.
கூட்டணி குறித்து பேச தகுதி உடையவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. கூட்டணி குறித்து பேச எங்களுக்கு அனுமதியில்லை. தோல்வி பயத்தில், இலவசம் என்ற மத்தாப்புகளை ஆளும் கட்சி அள்ளி வீசுகிறது. சபாநாயகர் நாற்காலிக்கு ஒரு தகுதி உண்டு. ஆனால், தற்போது அருகதையற்ற ஒருவர் அதில் அமர்ந்துள்ளதாக கூறினார்.
இரட்டை இலைக்கு மேல் தாமரை மலரும், இரட்டை இலை கீழே தாமரை மேல தான் உள்ளது. இலைக்கு மேலேதான் பூ மலரும் என்பதால்தான் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் என்று நயினார் நாகேந்திரன் சொன்னார் என விளக்கம் அளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

