Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்த மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் : 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வது குறித்த மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70 செஞ்சி சட்டமன்ற தொகுதி, 71 மயிலம் சட்டமன்ற தொகுதி, 72 திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, 73 வானூர் சட்டமன்ற தொகுதி, 74 விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, 75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மற்றும் 76 திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 07 சட்டமன்ற தொகுதிகளில் 2166 வாக்கு சாவடி மையங்கள் (Polling Station) அமைந்துள்ள 1138 வாக்கு சாவடி நிலை அமைவிடங்களில் (Polling station location) உள்ளது. இவற்றில் இன்றையதினம் இரண்டாம் கட்டமாக 71 மயிலம், 72 திண்டிவனம் (தனி), 74 - விழுப்புரம் மற்றும் 75 விக்கரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
மண்டல அலுவலர்கள் தங்களது மண்டலத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரிடையாக ஆய்வு மேற்கொண்டு அந்த வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி, சாய்தள வசதி. கழிப்பறை வசதி, கட்டிடம் நல்ல நிலையில் உள்ளதா, தளவாடச் சாமான்கள் உள்ளதா, மின்விளக்கு, மின்விசிறிகள் உள்ளனவா போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
அதேபோல், மண்டலத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்களது மண்டல காவல் அலுவலருடன் கூட்டுப்புலத்தணிக்கை மற்றும் கள விசாரணை மேற்கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றத்திற்கு காரணமான நபர்களை கண்டறிந்திட வேண்டும். அது தொடர்பான அறிக்கையினை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்திட வேண்டும்.
மண்டல அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை செயல்படுத்தும் முறை குறித்த நேரடிப்பயிற்சியில் மண்டல அலுவலர்களும் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமான தேர்தல் சம்மந்தமான அனைத்து அறிக்கை/படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என அறிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாக்குப்பதிவு கருவி (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவி (Control Unit), VVPAT போன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது மற்றும் சின்னம் பொருத்தும் பணி, வேட்பாளரின் எண்ணிக்கை உள்ளிட்ட வாக்குப்பதிவு மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் விநியோகிக்கும் மையத்தின் மூலம், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையேட்டில் குறிப்பிட்டவாறு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். மேலும், தங்கள் வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவிற்கு தேவையான டெண்டர் வாக்குச்சீட்டுகள், பார்வையற்றோருக்கு உதவும் வாக்குச்சீட்டு, வாக்காளர் விவர பதிவேடு, வாக்காளர் பட்டியல் படிவம் 17சி, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான நாட்குறிப்பு போன்றவை சரியாக உள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர தேர்தலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைய நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அனைத்து பணிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும். தேர்தல் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் குறித்த விவரங்களை மண்டல அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.






















