TTV vs Sasikala: சித்திக்கு எதிராக சீறும் டிடிவி.! சசிகலாவுடன் என்ன தான் பிரச்னை- ஓ...இது தான் காரணமா.?
TTV vs Sasikala: சசிகலாவிற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இருவருக்கும் இடையே இந்த மோதலுக்கு காரணம் என்ன.? என்பதை தற்போது பார்க்கலாம்.

அதிமுகவும் சசிகலாவும்
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிமுகவை 3வது பெரிய கட்சியாக உயர்த்தியவர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, அப்படி அசைக்கமுடியாத இரும்பு பெண்மணியான ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக உடன்பிறவா சகோதரியாக இருந்தார் சசிகலா, அதிமுகவை வழிநடத்துவது, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம், ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பலவற்றிலும் சசிகலாவின் உறவினர்களின் கை தான் ஓங்கி இருந்தது. இப்படி இருந்தவர்களில் ஒருவர் தான் டிடிவி தினகரன், தினகரனின் தாய் வனிதாமணி சசிகலாவின் சகோதரி ஆவார். இப்படி சித்தி- மகன் என்ற உறவு முறையில் இருந்தவர்கள் திடீரென நேருக்கு நேர் எதிரியாக மாறியுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
அதிமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி
2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா, பல ஆண்டுகளாக ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்தார். துணைப்பொதுச்செயலாளர் பதவியும் வழங்கினார். கட்சியை பிடித்த சசிகலா அடுத்ததாக முதலமைச்சர் பதவிக்கு குறிவைத்தார். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்லும் நிலை உருவானது. இதனால் கட்சியை டிடிவி தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் ஒப்படைத்து சிறைக்கு சென்றார் சசிகலா. இந்த நிலையில தான் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்களை டிடிவி மிரட்டியதாகவும், நிர்வாகிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது சசிகலாவிற்கு தெரியவந்ததையடுத்து டிடிவி தினகரன் மீது அதிருப்தி தொடங்கியுள்ளது. அப்போது தான் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கின் காரணமாக இரட்டை இலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் சிபிஐயிடம் சிக்கினார் டிடிவி தினகரன்.
சிறையில் சசிகலா- கட்சியில் டிடிவி
இதனை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் ஒன்றிணைந்த நிர்வாகிகள் மூலம் டிடிவி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார். அடுத்தாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து அதிமுகவை வழிநடத்தினார்கள். அப்போது அதிமுகவிற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன், சித்தி சசிகலாவை தலைமை பொறுப்பை ஏற்க டிடிவி கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதனை சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த போது அதிமுக அலுவலகத்திற்கு செல்லலாம் என சசிகலாவிற்கு டிடிவி தினகரன் யோசனை தெரிவித்தார். ஆனால் டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தவர், தனக்கு அதிமுகவில் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், தன்னை பார்க்க அதிமுகவினர் வருவார்கள் என கூறினார்.
சொத்து பிரிப்பதில் மோதல்
ஆனால் சசிகலா எதிர்பார்த்த எதுவும் நடைபெறவில்லை. அடுத்தாக நடைபெற்ற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், அமமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்தார். இதனையும் சசிகலா நிராகரித்து யாருக்கும் ஆதரவு இல்லை. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் சொத்து பிரிப்பதில் குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டது. அதிமுகவின் சேனலாக இருந்த ஜெயா டிவியை தனக்கு தரும்படி டிடிவி தினகரன் கேட்டார் ஆனால் அதனையும் தர மறுத்துவிட்டார். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் தினந்தோறும் அதிகரித்தது. இதன் காரணமாகவே கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்த தற்போது வரை இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையென கூறப்படுகிறது.
சசிகலாவை சந்தித்ததற்காக நீக்கப்பட்ட அமமுக நிர்வாகி
அப்படி தான் தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலாவும் சந்திக்க வாய்ப்பு இருந்த நிலையில் அதனையும் தவிர்த்தார் டிடிவி தினகரன், அடுத்தாக எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்வுகளிலும் இரண்டு பேரும் அருகருகே சென்றபோதும் எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் தான் சசிகலாவை அமமுக நிர்வாகி சந்தித்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே அமமுக மாணவியர் அணி செயலாளர் B.ஜிவிதா நாச்சியாரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் டிடிவி, அதுவும் நீக்கப்பட்டதற்கான காரணமாக கூறுயிருப்பது தான் அதிர்ச்சி,
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீதி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தான் டிடிவி மற்றும் சசிகலா ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























