TN SIR ECI: ஆரம்பிக்கலாமா..! தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம்
TN SIR ECI: தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TN SIR ECI: தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்:
சென்னை தியாகராய நகர் வாக்காளர் பெயர் சேர்ப்பு/நீக்கம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திமுகவிற்கு சாதகமாக அந்த தொகுதியில் இருந்த 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்து. அதன் மீதான விசாரணையின் போது, தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பணிகளை மேற்கொள்ள, தேர்தல் அதிகாரிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள் தீவிரம்:
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்காளர்களைச் சரிபார்ப்பதற்காக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலைத் தயாரிக்க வலியுறுத்தப்பட்டது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபடும் உள்ளூரில் விநியோகிக்கப்படும் மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பழங்குடிப் பகுதிகள், வடகிழக்கு மற்றும் கடலோர மாநிலங்களில், தன்னாட்சி கவுன்சில்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பெரும்பாலும் அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான செல்லுபடியாகும் சான்றாகக் கருதப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் Vs எதிர்க்கட்சிகள்:
பிறந்த இடத்தை சரிபார்ப்பதன் மூலம் சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளை ஒழிப்பதே இந்த தீவிர திருத்தத்தின் முதன்மையான நோக்கமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக வீடு வீடாகச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். அதேநேரம், பாஜகவுக்கு பயனளிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் தேர்தல் ஆணையம் கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று, வேறு மாநிலத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் சேர அல்லது இடம் மாற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான புதிய அறிவிப்பு படிவம் ஆகும்.
பீகாரில் சர்ச்சையான "SIR"
பீகாரில் அண்மையில் அரங்கேறிய சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியானது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. உரிய ஆவணங்கள் இல்லை என கூறி 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை செல்ல, எந்தவொரு தகுதியுள்ள குடிமகனும் விலக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் மீண்டும் பட்டியலில் சேர்க்க சொன்னதோடு, தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுத்த ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.





















