Ramadoss election alliance : யாருடன் கூட்டணி.? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் சொன்ன முக்கிய அறிவிப்பு
Ramadoss election alliance : ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம் என அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல்- பாமகவில் தொடரும் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்த பாமக, தற்போது தந்தை - மகன் இடையிலான மோதல் காரணமாக பிளவுப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். இதில் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். ஆனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாமகவின் தொடர் போராட்டங்கள்
இந்த நிலையில் அடுத்தக்கட்ட திட்டம் தொடர்பாக பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம்.
இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.
”நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது”
நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்.
நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம். எப்போதும் இணைந்தே இருப்போம். தொடர்ந்து உங்களோடு பேசுவேன் என அந்த கடிதத்தில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.























