MK Stalin: Sadist பாஜக அரசு.. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடியா? பணமில்லையா? மனமில்லையா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
MK Stalin: கடந்த நிதியாண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

நூறு நாள் வேலை திட்டத்தில் 2025-26 நிதியாண்டில், தமிழக பணியாளர்களுக்கு ரூ.17 ஊதிய உயர்வாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? என தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டம்:
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தற்போது 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து 5.33 சதவிகிதம் ஏற்றி 17 ரூபாயை உயர்த்தி, இனி நாளொன்றிற்கு ரூ.336 ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கான 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் சூழலில் இந்த ஊதிய உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு ஊழியர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்:
இந்த நிலையில் கடந்த நிதியாண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர்
“காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு! உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
— M.K.Stalin (@mkstalin) March 29, 2025
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில்… pic.twitter.com/bHyWLq8CNN
திமுக போராட்டம்:
இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரி,இன்று மார்ச் 29ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த பதிவை முதல் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

