Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
"அதனால்தான், அவரது பிறந்தநாளான நேற்று கனிமொழிக்காக வெட்டப்பட்ட கேக்கில் ’புறம் காத்தது போதும், அகம் காக்க வா’ என்று எழுதி, சட்டமன்ற புகைப்படத்தை பொறித்திருந்தனர்’

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கே சீட் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
டெல்லி நோக்கி நகர்த்தப்பட்ட கனிமொழி அரசியல்
எழுத்து, கதை, கவிதை என்றிருந்த கவிஞர் கனிமொழியை அரசியல் களத்திற்குள் கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி. தன்னுடைய கலை வாரிசு என்று அறிவித்த கனிமொழியை, மாநிலங்களைவைக்கு எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் அவர். அதன்பின்னர், கனிமொழியையும் டெல்லியையும் பிரிக்க முடியாதது என்று சொல்லும் அளவிற்கு அவரது அரசியல் டெல்லியை நோக்கியே நகர்த்தப்பட்டது. முரசொலி மாறன், வைகோ, டி.ஆர்.பாலு, வரிசையில் இன்று கனிமொழி நாடாளுமன்றத்தின் திமுகவின் முகமாக மாறியிருக்கிறார்.
மாநில அரசியலுக்கு வர கனிமொழி விருப்பம்
என்னதான் நாடாளுமன்ற குழுத் தலைவர், துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தூக்கிக் கொடுத்தாலும், மாநிலத்தில் அரசியல் செய்யவே கனிமொழி தொடர்ந்து விரும்புவதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலியே போட்டியிட கனிமொழி விரும்பியதாகவும் ஆனால், அதற்கான வாய்ப்பு அந்த நேரத்தில் அமையவில்லையென்று கூறும் அவர்கள், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஆயத்தப்பணிகளை கனிமொழி துவக்கிவிட்டதாகவும் பரபரக்கின்றனர்.
‘புறம் காத்தது போதும்’ ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!
அதனால்தான், அவரது பிறந்தநாளான நேற்று அவருக்காக வெட்டப்பட்ட கேக்கில் ’புறம் காத்தது போதும், அகம் காக்க வா’ என்று எழுதி, சட்டமன்ற புகைப்படத்தை பொறித்திருந்தனர். கூடவே, சமூக வலைதளங்களிலும் வெளியான வீடியோக்களில் கனிமொழி சட்டமன்றத்திற்கு செல்வது மாதிரியான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. கூடவே, சென்னையில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
#HBDKanimozhi 💥💥 pic.twitter.com/VDF0LIFWCu
— கலைஞர் பொண்ணு (@KalaignarPonnu) January 5, 2026
கனிமொழியின் திட்டம் என்ன ?
இந்நிலையில், கனிமொழி இப்படியான திட்டத்தில்தான் இருப்பதாகவும், இந்த முறை மாநில தேர்தலில் போட்டியிட அவர் விரும்புவதாகவும் சிஐடி நகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய விருப்பத்தை முக்கிய நிர்வாகிகள் சிலர் மூலமாகவும், மறைமுகமாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்துவிட்டதாகவும், சில நாட்களில் அவரே நேரடியாக இது பற்றி முதல்வரிடம் பேசவிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
4 தொகுதியை தேர்வு செய்துள்ள கனிமொழி ?
அதோடு, தான் போட்டியிட 4 தொகுதிகளை கனிமொழி இப்போதே தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், அதில் ஒன்று சென்னையில் உள்ள தொகுதி என்றும் கிசுகிசுக்கின்றனர் கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள்.
கோவில்பட்டியில் கனிமொழி போட்டி
குறிப்பாக, அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அந்த தொகுதி இல்லையென்றால் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கனிமொழி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரை மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை, இந்த முறை அவர் சீட் வேண்டாம் என்று சொன்னால், திருச்செந்தூர் தொகுதில் போட்டியிட கனிமொழி ஆயத்தமாகி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதோடு, இசுலாமியர்கள் அதிகம் உள்ள நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் நின்றால் வெற்றி நிச்சயம் என்பதால், அந்த தொகுதியையும் கனிமொழி தன்னுடைய பரிசீலனையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சராகும் கனிமொழி ?
தமிழக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் என்பது தற்போது இரண்டாக மட்டுமே உள்ள நிலையில், வரும் தேர்தலில் கனிமொழி நின்று திமுக தொடர்ந்து 2வது முறையாக வென்றால் முக்கியமான துறைக்கு கனிமொழி அமைச்சர் ஆக்கப்படுவதற்கு 99.99% வாய்ப்புகள் உள்ளன.





















