மேலும் அறிய
நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான் - முதல்வர் மதுரையில் பேச்சு !
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த “பாச்சா” எல்லாம் பலிக்காது! - மதுரையில் முதல்வர் எச்சரிக்கை.

முதலமைச்சர் ஸ்டாலின்
எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது! “எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது. உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. - தமிழ்நாடு முதல்வர்.
சூழ்ச்சிகளை முறியடிப்போம்
ஒவ்வொரு நாளும் இத்தனை இலட்சம் மக்கள் பயனடைகின்றது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெறிச்சலிலும், ஆற்றாமையிலும், ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் ‘வேறு’ அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாக சொல்கிறேன்.. அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம்! அதை சிதைப்போம்! எதுவும் எடுபடாது.
உள்ளூர் மக்களுக்கு தெரியும்
இப்படி, நம்முடைய சிந்தனை எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி; முன்னேற்றம்தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்னையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். காலம் காலமாக கார்த்திகை தீபத்துக்கு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதேநேரத்தில், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றி, சாமி புறப்பாடாகி, பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் இடத்தில், சொக்கப்பான் ஏற்றி, சாமிக்கு ரக்ஷை சாத்தப்பட்டது. இவையெல்லாம், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முறையாக நடைபெற்றது. இவைகள் எல்லாம் உள்ளூர் மக்களுக்கும், உண்மையான பக்தர்களுக்கும் இது நன்றாக தெரியும்.
வழக்கமான இடத்தில் தீபம்
அவர்கள் நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு தான் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனாலும், இப்போது என்ன காரணத்துக்காக பிரச்சினை நடைபெறுகிறது? இந்தப் பிரச்சினையைக் கிளப்புகின்ற கூட்டத்தின் நோக்கம் என்ன? இவையெல்லாமே மக்களுக்கு, நன்றாகவே தெரியும். ஆன்மீகம் என்பது, மன அமைதியை, நிம்மதியை தந்து, மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்கவேண்டும். நான்கு பேருக்கு நன்மை செய்யவேண்டும். இதுதான் உண்மையான ஆன்மீகமாக இருக்க முடியும். ஒரு சிலருடைய அரசியல் இலாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்கி, சமூகத்தை துண்டாடும் சதிச்செயல்கள் நிச்சயமாக ஆன்மீகம் இல்லை. அது அரசியல், அதிலும் கேடுகெட்ட மலிவான அரசியல். தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. நான் இன்னும் பெருமையோடு பக்தப் பெருமக்களுக்கு சொல்கிறேன்.. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆயிரத்து 490 நாளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க
இப்போது அந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கும். இப்படிப்பட்ட அரசை, ஆன்மீகத்துக்கு எதிரி என்று சொன்னால், அப்படி சொல்லக் கூடியவர்களுடைய உள்நோக்கம் என்ன என்று, உண்மையான பக்தர்களுக்கு தெளிவாக தெரியும். அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகதான் தமிழ்நாடு என்றைக்கும் இருக்கும். மதுரை மக்களிடம் வளர்ச்சி என்று சொன்னால், வாங்க! வாங்க! என்று வரவேற்பார்கள். அதுவே வன்முறையை தூண்ட கூப்பிட்டால், என்ன செய்வார்கள் தெரியுமா? மதுரை ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால், கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க!’ அமைதியின் பக்கம் நிற்கின்ற, மதுரை மக்களுக்கு நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய எதிரிகள், டெல்லியில் இருந்து நமக்கு எத்தனை இடைஞ்சல்கள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகள் ஏற்படுத்தினாலும், ஆளுநர் மூலமாக, முட்டுக்கட்டைகள் போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர்-1-ஆக வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம்
எங்களுடைய வளர்ச்சிப் பயணத்தை, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் சதித்திட்டங்கள் எல்லாம் நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் எப்படி பந்து வீசினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்பது சிக்சர்தான். அந்த டீமுக்கு ஏற்றார்போல அடிமைகள் சிக்கலாம். பழைய அடிமைகள், புது அடிமைகளை வைத்து, ‘பி’ டீம், ‘சி’ டீம் உருவாகலாம். ஆனால், கடைசியில் டோர்னமென்ட்டில் சாம்பியன் நாங்கள் தான்.
வருகின்ற 15-ஆம் தேதியில் இருந்து, ஏற்கனவே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைகின்ற ஒரு கோடியே 14 இலட்சம் மகளிரோடு சேர்த்து, விடுபட்ட தகுதியான மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப் போகிறோம்.
சமத்துவ தீபம்
மதுரை மக்கள் மீதான நம்பிக்கையில் சொல்கின்றேன். அனைத்து மதத்தினரும், அங்காளி, பங்காளியாக பழகுகின்ற, பாசக்கார மதுரை மண்ணிலிருந்து உறுதியாக சொல்கின்றேன். எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும். உங்களால் அதை தடுக்க முடியாது! “எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கிறது. உள்ளே பெரியார் ஏற்றிய நெருப்பிருக்கிறது. 2026-லும் அதே ஃபயருடன், திராவிட மாடல் அரசுதான் தொடரும்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















