சோகம்! தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உயிரிழப்பு - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி
தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க. சார்பில் முதன் முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வேலாயுதம் காலமானார்.
பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ.
தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்வதற்கு முக்கிய பங்காற்றியவர் வேலாயுதம். கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் இவர். கன்னியாகுமரி மாவட்டம் பதம்நாபபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய வேலாயுதம் 27,443 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
உயிரிழப்பு:
அதன்பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க. கட்சியின் முக்கிய நபராக இவர் விளங்கினார். அதோடு பா.ஜ.க.வின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். அதன் பிறகு வந்த 2001, 2006 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், இன்று (08.05.2024) காலமானார். இவருக்கு வயது 73. இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கையெழுத்து இயத்தை நடத்தியிருக்கிறார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை செளந்தரராஜன் இரங்கல்:
கன்னியாகுமரி மாவட்டம் - பத்மநாபபுரம் தொகுதியில் 1996-ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தென்னிந்தியாவின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமை பெற்ற வரலாற்று நாயகன் திரு.வேலாயுதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
— Dr Tamilisai Soundararajan (மோடியின் குடும்பம் ) (@DrTamilisai4BJP) May 8, 2024
(1/2) pic.twitter.com/PFRDIOVyGz
இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ”தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா C.வேலாயுதம் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர். ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி !” என்று குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the passing away of former MLA and social worker C. Velayutham ji. He was the first-ever assembly candidate elected to the Tamil Nadu Legislative Assembly from the BJP, representing the Padmanabhapuram constituency in the 1996 elections. His commitment and…
— Jagat Prakash Nadda (Modi Ka Parivar) (@JPNadda) May 8, 2024
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான C.வேலாயுதம் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். தமிழக பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாபெரும் பெருமையை பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து 1996 ல் பெற்றவர் அவர். கட்சிக்கும் , சமூகத்திற்கும் அவர் அளித்த கடமைப்பண்பும், அர்ப்பணிக்கும் குணமும் காலம் கடந்து நினைவேற்கப்படும். அன்னாரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த மற்றனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், இந்த துயர தருணத்தைக் கடந்த்தேற எல்லா வலிமையும் பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி..” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது இறுதிசடங்கு நாளை (09.05.2024) காலை 10.30 மணி நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.