Annamalai: அண்ணாமலைக்கு அடித்த ஜாக்பாட்.. திறமையை பாராட்டிய தலைமை.. தேசிய அளவில் பொறுப்பு...
பாஜக தமிழ்நாடு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு கிடைக்க உள்ளது. அவரது திறமையை பாராட்டியுள்ள தலைமை, இந்த தகவலை தெரிவித்துள்ளது.

பாஜக தமிழ்நாடு தலைவர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. இந்நிலையில், ஏற்கனவே தலைவராக இருந்த அண்ணாமலை என்ன ஆவார் என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அவரது நிர்வாகத் திறமையை பாராட்டி, அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கிய பங்காற்றிய அண்ணாமலை
பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ், 2019-ல் பெங்களூரு தெற்கு காவல்துறை இணை ஆணையராக பணியாற்றியபோது, அந்த பணியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தார். விவசாயத்தில் ஆர்வம் காட்டிய அண்ணாமலை, ஐஏஎஸ் பயிற்சி மையத்தையும் தொடங்கினார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, போதைப் பொருளுக்கு எதிராகவும், சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பின்னர் பாஜகவில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கிய அண்ணாமலை, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், பாஜக தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேடைப் பேச்சுகளில் அதிரடி காட்டும் அண்ணாமலை, சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. புள்ளி விவரங்களுடன் கூடிய அவரது பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் திரும்பிப் பார்க்கச் செய்தார். அதோடு, என் மண் என் மக்கள் என் பாதயாத்திரை மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலும் பிரபலமடைந்தார். அவரோடு பாஜக-வையும் பிரபலமடையச் செய்தார். அவரது நிர்வாகத் திறமையும் பாராட்டு பெற்றது.
தமிழ்நாடு தலைவர் பதவியிலிருந்து விடுவிப்பு - தேசிய அளவில் பொறுப்பு
பாஜக தமிழ்நாடு தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரே தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான மோதல் போக்கு காரணமாக, கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தற்போது அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில், புதிய தலைவர் குறித்தும், அண்ணாமலை குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அமித் ஷா. அதில், மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து வேட்புமனு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அரசியல் மற்றும் திட்டங்களை கிராமம் கிராமமாக மக்களிடம் எடுத்துச் சென்றதில், அவரது பணிக்கு ஈடு இணை இல்லை என பாராட்டியுள்ளார். அண்ணாமலையின் நிர்வாகத் திறனை தேசிய அளவில் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படும் என தெளிவாகிறது. அது என்ன பதவி என்பது விரைவில் தெரியவரும்.





















