பகுதிநேர ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம்...! தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை இதுதான்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 16-09-2025 செவ்வாய் கிழமை அன்று தலைமைச் செயலாளர் அலுவலகம், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பள்ளிக்கல்வி, நிதித்துறை அலுவலகத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும், தீபாவளிக்கு பண்டிகை முன்பணம் வழங்கவும் கோரிக்கை மனு கொடுத்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
பண்டிகை முன்பணம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை
அரசு வேலை, அரசுப் பள்ளியில் வேலை என கல்விப் பணி செய்து வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் 12,500 ரூபாயைத் தவிர தமிழக அரசின் சலுகைகளும், பணப் பலன்களும் இதுவரை கிடைக்கவில்லை என்ற குறை உள்ளது. இந்தக் குறையை போக்கும் விதமாக இந்த முறையாவது தீபாவளி செலவுகளுக்கு கடனாக அதாவது பண்டிகை முன்பணம் வழங்கி அதனை மாதச் சம்பளத்தில் தவணை முறையில் பிடித்தம் செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இதை செய்தால் 12 ஆயிரம் குடும்பங்கள் தீபாவளியை கடன் வாங்காமல் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.
15 ஆண்டுகளாக நீடிக்கும் பகுதி நேர பணி
2012 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் நியமிக்கப்பட்டு இதோடு 15 -வது கல்வியாண்டில் பணிபுரிந்து வருகின்றார்கள். 15 ஆண்டு பணி அனுபவத்தை கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 12 ஆயிரம் பேர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட திமுக தேர்தல் வாக்குறுதிபடி முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சட்டசபையில் அமைச்சர் தெரிவித்ததை செயல்படுத்த வேண்டும்
இதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 16-09-2021 அன்று நடந்த அனைத்துத் துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்ட முடிவின்படி திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என பள்ளிக்கல்வி அமைச்சர் சட்டசபையில் தெரிவித்ததை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பணி நிரந்தரம்
மேலும், பழைய ஓய்வூதியம் மீண்டும் வேண்டும் என கேட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வருகின்றார்கள். அதனை அரசு பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட காலமாக தொகுப்பூதியத்திலே ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு சலுகைகள் எதுவுமே இல்லாமல் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் சொன்னபடி பணி நிரந்தரம் செய்து விட்டால் பகுதிநேர ஆசிரியர்களின் ஒட்டு மொத்த பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடும்.
கலைஞரை தொடர்ந்து ஸ்டாலினும் கொடுத்த வாக்குறுதி
இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் கலைஞர், ஸ்டாலின் தலைமையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டு உள்ளதால் அதற்கு முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுத்து இந்த ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















