லண்டனில் உள்ள சீகன் பால்கு தமிழில் அச்சிட பைபிளை தரங்கம்பாடிக்கு கொண்டு வர வேண்டும் - பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ்
தஞ்சாவூர் மியூசியத்தில் இருந்து களவாடப்பட்டு, லண்டன் மியூசியத்தில் உள்ள சீகன் பால்கு தமிழில் அச்சிட பைபிளை தரங்கம்பாடிக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

லண்டனில் உள்ள சீகன் பால்கு தமிழில் அச்சிட பைபிளை தரங்கம்பாடிக்கு கொண்டு வர வேண்டும் என சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 319 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டத்திபோது பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தரங்கம்பாடிக்கு வந்த சீகன் பால்கு
ஜெர்மனி நாட்டை சேர்ந்த தமிழறிஞர் சீகன் பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆண்டு தினத்தை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் தரங்கம்பாடியில் கொண்டாடப்பட்டது. தமிழறிஞர் சீகன்பால்கு ஜெர்மனியிலிருந்து 222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 -ம் ஆண்டு, ஜூலை 09-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்தடைந்தார். தரங்கம்பாடியில் தமிழ் மொழியை கற்று, தரங்கம்பாடியில் இயந்திரம் மூலம் இயங்கும் அச்சகம் மற்றும் காகித ஆலை அமைத்து ஜெர்மன் மொழியிலிருந்து பைபிளை இந்தியாவிலேயே தமிழில் முதன்முதலாக மொழி பெயர்த்து காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டார். மேலும், ஓலைச்சுவடியில் இருந்த தமிழ்நூல்களான திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட பழம்பெரும் நூல்களை காகிதத்தில் அச்சேற்றி நூலாக வெளியிட்டார்.

319 -ம் ஆண்டு விழா
தொடர்ந்து 1708 -ல் கல்விக்கூடம் அமைத்தார். பெண்களுக்கென தனி பள்ளிக்கூடம், விடுதி போன்றவற்றை அமைத்து அதில் விதவைகளை ஆசிரியர்களாக நியமித்தவர் தமிழறிஞர் சீகன் பால்க். தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், இன்னும் பல்வேறு சாதனைகளை தமிழ்மொழிக்காக செய்தார். சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்து இறங்கிய 319 ஆம் ஆண்டு நினைவு நாள் தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் கொண்டாடப்பட்டது.
சீகன்பால்கு வந்து இறங்கிய கடற்கரை இடத்தில் இருந்து பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் பள்ளி மாணவர்கள், டிஇஎல்சி நிர்வாகத்தினர் சீகன்பால்க் திருவுருவச் சிலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து, பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் அரசுக்கு வைத்த கோரிக்கை
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேராயர் கிரிஸ்டியன் சாம்ராஜ் கூறியதாவது, இந்தியாவில் முதல் அச்சுக் கூடத்தை நிறுவிய சீகன்பால்குவிற்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மணிமண்டபம் மற்றும் ஒரு அரங்கம் கட்டுவதற்கு ஒப்புதல் தெரிவித்து கடந்த ஆண்டு ஜூன் 24 -ஆம் தேதி சட்டசபையில் தமிழக அரசு அறிவித்தது. மேலும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு 1715 -ல் சீகன்பால்க் தமிழில் அச்சடித்த பைபிளின் ஒரு பிரதி தஞ்சாவூர் மியூசியத்தில் இருந்து களவாடப்பட்டு, லண்டன் மியூசியத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தமிழகத்திற்கு விரைவில் கொண்டு வந்து சீகன்பால்கு வாழ்ந்த அவரது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடி சீகன்பால்க் மியூசியத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.





















