மேலும் அறிய
தனித்துவமான மேலூர் கரும்புக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மேலூர் கரும்பிற்கு புவிசார் குறியீடு வழங்குவதால் மதுரை மற்றொரு அடையாளமாக உருவெடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலூர் கரும்பு
Source : whats app
கரும்பின் இனிப்பு பின்னால் உள்ள விவசாயிகளின் கடின உழைப்பு - கரும்பு வயலில் உள்ள வாய்க்காலில் வெறும்கால்களுடன் கட்டுகட்டாக கரும்புகளை சுமந்துசெல்லும் கரும்புவெட்டும் விவசாய தொழிலாளர்கள்.
மேலூரில் இருந்து வெளியூர்களுக்கு கரும்பு
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு உட்பட்ட எட்டிமங்கலம், சுக்காம்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், மாங்குளம், நாவினிபட்டி, நொண்டிகோவில்பட்டி, பல்லவராயன்பட்டி, சருகு வலையப்பட்டி, வடக்கு வலையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 900 ஏக்கர் பரப்பளவில் பயிரப்படப்பட்ட கரும்புகள் மும்பை, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது கடைசிக் கட்ட பணி நடைபெற்று வருகிறது. மேலூர் கரும்புகள் அதிக இனிப்பு சுவையுடையது என்பதால் நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மேலூர் கரும்புகளுக்கு வரவேற்பு உள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டி லாரிகள் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தாலும் குறைவாக பயிரிடப்பட்டதால் கடந்தாண்டை விட கரும்புவின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கரும்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பு
கரும்புகளை அனுப்பும் பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு கரும்புகளை கடும் சிரமத்தோடு வயல்வெளிகளில் மண்கட்டிகள் மற்றும் வரப்புகளில் காலில் காலணி கூட இல்லாமல் 15 கரும்புகள் அடங்கிய கட்டுகளை வேகமாக சுமையோடு ஓடோடி சென்று வாய்க்காலில் நடந்துசெல்லும் சிறு மரப்பலகையில் நடந்தபடி லாரிகளில் கரும்புகளை ஏற்றிவைக்கின்றனர். கரும்புகட்டுகளின் அடிப்படையில் சொற்ப ஊதியமே கிடைக்கும் நிலையிலும் கழுத்து வலியோடு் கரும்புகட்டுகளை லாரியில் ஏற்றும் கழுத்தே உடையும் அளிவிற்கு அவசரவசரமாக ஏற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். கரும்பு விவசாய இடத்தில் உள்ள கரும்புகளை வெட்டி எடுத்து, அதனை கட்டாக கட்டி கையில் கரும்புதோகையின் சொனை ஒட்டும் நிலையில் கடின உழைப்பை வெளிப்படுத்துகின்றனர். இப்படி பல்வேறு உழைப்பிற்கு பின் இல்லங்களுக்கு இனிப்பாக சென்றடையும், மேலூர் கரும்புக்கு புவிசார் குறியீடு வேண்டும் என சொல்லப்படும் Geographical indication (புவியியல் சார்ந்த குறியீடு) வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர் கரும்பிற்கு புவிசார் குறியீடு
இதுகுறித்து மேலூர் கரும்பு விவசாயி ஸ்டாலின் பாஸ்கரன் கூறுகையில்...,” தமிழகத்தில் பல பகுதியில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ஆனாலும் மேலூர் கருப்பிற்கு தற்போதும் மவுசு குறையாமல் இருக்கிறது. காரணம் இப்பகுதியில் இருக்கும் மண் வளம் மற்றும் நீர் வளம் தான். இயற்கையாகவே பல்வேறு வளத்தை மேலூர் பகுதி பெற்றுள்ளதால் தான் கிரானைட், டங்ஸ்டன் போன்ற கனிமங்களை எடுக்க இப்பகுதியை தேர்வு செய்கின்றனர். மேலூர் கரும்பை முறையாக வளர்த்தால் உயரம், தடிமன், கருமை நிறம் சிறப்பாக இருக்கும். இதனுடன் கரும்பு அதிகமான இனிப்பு சுவை மற்றும் கடித்து இழுக்க இலகு வான பட்டை இருப்பதால் மேலூர் கரும்பு தனித்துவம் பெருகிறது. எனவே அதிகாரிகள் மேலூர் கரும்புகளை முறையாக ஆய்வு செய்து புவிசார் குறியீடு வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் எங்கள் பகுதியின் விளைபொருள் பல இடங்களில் கிடைக்கும். விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும். அதே போல் மதுரை மாவட்டத்திற்கு மற்றொரு பெருமையும் சேரும்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jallikattu : நாட்டின மாடுகளை காப்பாற்ற இப்படியொரு முயற்சியா... இளைஞரின் புது ஐடியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















