ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தம்; பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு - நடந்தது என்ன..?
கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கொசவபட்டியில் உள்ள புனித உத்திரியமாதா அந்தோணியார் பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் காளைகளும், வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டியின் 8வது சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் 420 காளைகளும் 350 காளையர்களும் களம் இறங்கி விளையாடினர் ஏராளமான காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி பார்வையாளர்களை வசப்படுத்தியது அவர்கள் கரகோஷம் எழுப்பியும் ஆரவாரம் செய்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பல காளையர்கள் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி பரிசினை பெற்று சென்றனர்.
இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் 465க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்க நிலையில் 45காளைகள் அதிகமாக களம் இறங்கிய நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் பின்னே களமிறங்க காத்திருந்தன அப்போது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் போட்டி முறையாக நடத்தப்படவில்லை என்றும் அரசு அறிவித்த விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்றும் இதில் பலரும் பார்வையாளர்கள் உட்பட பலரும் காயம் அடைந்து வருவதையும் சுட்டிக்காட்டி போட்டியை பாதியிலேயே நிறுத்த உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை தொடர்ந்து கொசவபட்டி ஜல்லிக்கட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாடுபிடி வீரர்கள் 5 பேர் மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர் பார்வையாளர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த 21 பேரில் பத்து பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் ஜல்லிக்கட்டில் நிறுத்திய பிறகும் அங்கு காத்திருந்த 100க்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்த உரிமையாளர்கள் கலைந்து செல்லாமல் நின்றதால் போலீசாருக்கும் காளைமாடு உரிமையாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஆனது பிறகு லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அவர்களை கலைத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















