Crime: செல்போனை திருப்பி கேட்டதால் கத்திக்குத்து.. ஆத்திரத்தால் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்!
செல்போன் வாங்கியது தொடர்பாக இரு தரப்பினரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
![Crime: செல்போனை திருப்பி கேட்டதால் கத்திக்குத்து.. ஆத்திரத்தால் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்! crime: A teenager died miserably after being stabbed by someone who asked him to return his cell phone in Chinnamanur near Theni. Crime: செல்போனை திருப்பி கேட்டதால் கத்திக்குத்து.. ஆத்திரத்தால் பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/b56388d0e93a7211a41a4bfc730429bb168758317134877_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (25). சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா. இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜா செல்போனை ஒண்டி வாங்கி சென்றுள்ளார். அதன்பின்னர் செல்போனை யுவராஜா பலமுறை திருப்பி கேட்டார்.
ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு தனது நண்பரான வினோத் குமார் (24) என்பவரிடம் யுவராஜா கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தனர். இதை அறிந்த யுவராஜா தனது செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்து சென்றார். அங்கு செல்போன் வாங்கியது தொடர்பாக இரு தரப்பினரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வௌ்ளத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். செல்போனை திருப்பி கேட்டதால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வினோத் குமார் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தப்பி சென்ற ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வினோத்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைந்து பிடித்து விடுவதாக போலீசார் உறுதியளித்தனர். அதற்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை வினோத்குமார் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டு அவரது உறவினர்கள் கலைந்து சென்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)