அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
Kanchipuram Double Rail Line: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே கமிட்டியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் நகர் பகுதிகளை, இணைக்கக்கூடிய மிக முக்கிய போக்குவரத்தாக, மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை அருகே இருக்கக்கூடிய காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களையும், மின்சார ரயில் போக்குவரத்து சேவை இணைக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் பகுதிகளுக்கு ரயில் சேவை இருந்தாலும், போதுமான அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை, என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கூடுதலான ரயில் சேவை என்பது ரயில்வே நிர்வாகம் சார்பில் செய்து தரப்படாமலே இருந்து வருகிறது.
இரட்டை ரயில் பாதை கோரிக்கை - Kanchipuram Double Rail Line
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே 30 கிலோமீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை அமைக்கப்படாமல் உள்ளதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதில் தொடர்ச்சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பயணிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், தன்னார்வால அமைப்புகள் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்தும் இரட்டை ரயில் பாதை இன்று வரை அமைக்கப்படாமல் இருக்கிறது.
இதனால் பாலூர், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் எதிரே வரும் மற்றொரு ரயிலுக்காக, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதேபோன்று ரயில் நிலையங்களிலும் போதிய வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
வருமானத்தை அள்ளித் தரும் ரயில் நிலையங்கள்
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே 12 ரயில் நிலையங்கள் உள்ளன. 12 ரயில் நிலையங்களிலும் அதிக அளவு வருமானம் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் தொடர்ந்து, அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
12 ரயில் நிலையங்களிலும் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 35 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. இதுதொடர்ந்து அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் ரயில் நிலையத்தில், ஆண்டுதோறும் 16 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனாலும் கூடுதல் ரயில் சேவை என்பது இயக்கப்படாமலே இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், ஆண்டுதோறும் அதன் வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஏற்றார் போல் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கமிட்டி ஒப்புதல்
இந்தநிலையில் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்படுத்துவதற்காக ரயில்வே கமிட்டியின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது. கமிட்டியின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், இதற்கான அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்திற்கான சர்வே எடுக்கப்படும், தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் இரண்டு மாதத்தில் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கமிட்டி ஒப்புதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருப்பது, பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















