மாணவிகளை கொண்டு மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: அதிர்ச்சியில் பள்ளி! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
சுஜாதா அரசாங்க அறிவுறுத்தல்களை பலமுறை மீறியதாக இடைநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி வகுப்பறையில் தனது மாணவர்களை வேலை வாங்கிய அரசு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மாணவிகளை கொண்டு தனது கால்களை மசாஜ் செய்ய வைத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள பந்தப்பள்ளி கிராமத்தில், அக்கிராம மக்களுக்காக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுஜாதா என்ற ஆசிரியர் மாணவிகளை தனது கால்களை மசாஜ் செய்யும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. மசாஜ் செய்யும்போது அவர் சர்வ சாதாரணமாக தனது கால்களை நீட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு மாணவிகளை தனது கால்களை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறி ஆந்திர அரசு நேற்று அந்த ஆசிரியையை இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும், சுஜாதா அரசாங்க அறிவுறுத்தல்களை பலமுறை மீறியதாக இடைநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம்
இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை கவனமாக பரிசீலித்த பிறகு இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் ஆசிரியை சுஜாதா அரசாங்கம் அவ்வப்போது பிறப்பித்த அறிவுறுத்தல்களை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களை தனது கால்களை மசாஜ் செய்து தனது தனிப்பட்ட பணிகளைச் செய்ய வைத்தது. வகுப்பறையில் கால்களை நீட்டி உட்கார்ந்து, மாணவர்களை தனது தனிப்பட்ட வேலைகளைச் செய்ய வைப்பது போன்ற அவரது செயல்கள், அவரது தொழில்முறை கடமைகளில் பெரும் அலட்சியத்தைக் காட்டுகின்றன என்று இடைநீக்க உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





















