Pahalgam Attack: திருமணமான 6-வது நாள்.. மனைவி கண் எதிரே கொல்லப்பட்ட நேவி அதிகாரி.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்...
பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், திருமணமான 6 நாட்களில், தன்னுடைய கணவரை இழந்துள்ளார் ஒரு இளம் பெண். அவர் கணவரின் உடல் அருகே அமர்ந்துள்ள புகைப்படம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சுமார் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், திருமணமாகி 6 நாட்களே ஆன நிலையில், ஹனிமூன் வந்த இளம் ஜோடியில், மனைவியின கண் முன்னே கணவர் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணமான 6 நாட்களில் கணவரை இழந்த இளம் பெண்
இந்த துப்பாக்கிச் சூட்டில், தனது கணவரை இழந்துள்ளார் ஒரு இளம் பெண். துப்பாக்கிச் சூட்டிற்குப்பின் பேசியுள்ள அவர், தன்னுடைய கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி ஒருவர், தன் கணவரிடம் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும், பின்னர் நீ இஸ்லாமியர் அல்ல எனக் கூறி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். இறந்தவர் கடற்படை அதிகாரி என தெரிகிறது.
இந்த தம்பதிக்கு, திருமணமாகி 6 நாட்கள் தான் ஆவதாக தெரிகிறது. தேனிலவுக்கு வந்த இடத்தில், அவர்களுக்கு இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது. தனது கணவரின் உடல் அருகே அமர்ந்து அந்த பெண் அழும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு, இந்த தீவிரவாத தாக்குதலின் கொடூரத்தையும் படம்பிடித்து காட்டியுள்ளத.
துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள், ஒவ்வொரு ஆணிடமும் பெயரை கேட்டு, அவர் இந்துவா, இஸ்லாமியரா என்பதை உறுதி செய்து கொன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இஸ்லாமியர் என்று கூறியும், அதை நம்பாமல், பேன்ட்டை கழற்றச் சொல்லி, பின்னர் சுட்டுக்கொன்றதாக சிலர் கூறியுள்ளனர்.

