சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் ஆக., 16 மாலை திறக்கப்படுகிறது. ஆக., 21 வரை பூஜைகள் நடைபெறும். அதன் பின் ஆக., 24- மாலை நடை திறந்து 28- வரை திருவோண பூஜைகள் நடக்கும்.
கனமழை காரணமாக சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் ஆவணி மாதம் மற்றும் ஓணம் பூஜைகளுக்கான முன்பதிவு துவங்கியது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் சபரிமலை செல்வதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. சில பக்தர்கள் புல் மேடு வழியாக சன்னிதானம் வந்தனர். இதனால் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து நிலக்கல்லில் இருந்து ஊருக்கு திரும்பினர்.
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் ஆக., 16 மாலை திறக்கப்படுகிறது. ஆக., 21 வரை பூஜைகள் நடைபெறும். அதன் பின் ஆக., 24- மாலை நடை திறந்து 28- வரை திருவோண பூஜைகள் நடக்கும். இந்த இரு கட்டங்களிலும் பக்தர்கள் செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று துவங்கியது. www.Sabarimalaonline.org இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















