![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Cauvery Water: தமிழக விவசாயிகளை மதிக்கிறேன்.. மேகதாது கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும்தான்.. மனம் திறந்த கர்நாடக துணை முதலமைச்சர்
தமிழ்நாடு விவசாயிகளை மதிக்கிறேன் ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
![Cauvery Water: தமிழக விவசாயிகளை மதிக்கிறேன்.. மேகதாது கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும்தான்.. மனம் திறந்த கர்நாடக துணை முதலமைச்சர் Karnataka Deputy CM DK Shivakumar says respect the farmers of Tamil Nadu Mekedatu will help Tamil Nadu also Cauvery Water: தமிழக விவசாயிகளை மதிக்கிறேன்.. மேகதாது கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும்தான்.. மனம் திறந்த கர்நாடக துணை முதலமைச்சர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/31/f64777b742093335cc221ff57af92dd41693486139418729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடாக அரசு திறந்துவிட்டுள்ளது. அதன்படி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு நொடிக்கு 4,398 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மைசூரில் உள்ள கபினி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை, கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு திறந்துவிடும் அளவு 7,329 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு:
தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த நிலையில், கர்நாடகாவில் வறட்சி நிலவி வருவதாக கூறி, கர்நாடக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து, ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தண்ணீரை திறந்து விட்டால் போராட்டம் நடத்துவோம் என பல்வேறு விவசாய அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
"ஒரே தீர்வு மேகதாது திட்டம்தான்"
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "இதற்கு ஒரே தீர்வு மேகதாது திட்டம்தான். கர்நாடகாவில் உள்ள இடங்களைப் பார்வையிட்டு, எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பார்க்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று அனைத்து சட்ட வல்லுனர்களையும் சந்தித்து பேசினோம். தற்போது, கர்நாடகா சார்பில் ஆஜரான எங்கள் மூத்த வழக்கறிஞரை சந்திக்க ஒட்டுமொத்த குழுவும் சென்று கொண்டிருக்கிறது. 5,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் கர்நாடகாவுக்கு பெரும் வேதனை.
மழை இல்லை. கர்நாடகாவின் உணர்வுகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு விவசாயிகளையும் மதிக்கிறோம். ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேகதாதுதான் தீர்வு என்பதே எங்களின் வேண்டுகோள். மேகதாது கர்நாடகாவுக்கு இல்லை. அது தமிநாட்டுக்கும் உதவும்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. நீரை திறந்துவிடவில்லை என்றால், வழக்கு விசாரணையின்போது, கர்நாடக அரசுக்கு உச்ச நிதிமன்றம் கண்டனம் தெரிவித்துவிடும் என்பதால் கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை, கர்நாடக ராஜா ரைதா சங்கா அமைப்பை சேர்ந்த விவசாயிகள், கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)