![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gyanvapi Case: ஞானவாபி வழக்கு : மசூதி இருந்த இடத்தில் கோயில்.. இந்திய தொல்லியல் துறை பரபரப்பு
ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Gyanvapi Case: ஞானவாபி வழக்கு : மசூதி இருந்த இடத்தில் கோயில்.. இந்திய தொல்லியல் துறை பரபரப்பு Gyanvapi Case ASI Survey Report Says a Large Hindu Temple Existed Under the Gyanvapi Mosque Gyanvapi Case: ஞானவாபி வழக்கு : மசூதி இருந்த இடத்தில் கோயில்.. இந்திய தொல்லியல் துறை பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/7a65e5ba98aeb0c1fa67cfdd5d5fb5621706250609541572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அயோத்தியை போல தொடர் சர்ச்சையை கிளப்பி வருவது ஞானவாபி மசூதி வழக்கு. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
ஞானவாபி வழக்கு:
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஞானவாபி மசூதியில் ஆய்வு நிறைவுபெற்றதை தொடர்ந்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அது தொடர்பான ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை சீலிடப்பட்ட கவரில் சமர்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆய்வறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டால், அது தேவையற்ற வதந்திகளுக்கு வழிவகுக்கும் என்றும் தவறான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் என்றும் இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் கூறியது.
ஆனால், ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, ஆய்வு அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும், வழக்கின் பிற தரப்பினருக்கும் வழங்க வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அறிக்கை, பொதுவெளியில் வெளியிடப்படாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பரபரப்பை கிளப்பிய இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கை:
இந்த நிலையில், ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
முன்பு இருந்த இந்து கோயிலின் ஒரு பகுதி தற்போது மசூதியின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்து கோயிலின் தூண்களில் சிறிய மாற்றங்கள் செய்து அதன்மீது கட்டுமானங்கள் எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக ஆய்வறிக்கையில் உள்ளது.
இந்து கோயிலை 17ஆம் நூற்றாண்டில் இடித்திருக்கலாம். தற்போது மசூதியில் இருக்கும் தூண்கள் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்து கோயிலில் பயன்படுத்தப்பட்ட சிலைகள், அங்குள்ள நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு இருந்துள்ளது.
முன்பு இருந்த இந்து கோயிலின் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் தேவநாகரி, கிரந்த, தெலுங்கு மற்றும் கன்னடம் என 32 வகையான எழுத்துகள் இருந்துள்ளன. இந்த எழுத்துகளின் வாயிலாக மூன்று இந்து தெய்வங்களின் பெயர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனார்த்தன, ருத்ரா மற்றும் உமேஷ்வரா போன்ற மூன்று தெய்வங்களின் பெயர்கள் காணப்படுகின்றன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)