Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
Supreme Court: கீழமை நீதிமன்றங்களின் தவறான தீர்ப்பால் 22 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த நபரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Supreme Court: தவறான தீர்ப்பால் 22 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த நபரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
வீணாய் போன 22 ஆண்டுகள்
விசாரணை நீதிமன்றம் ஆதாரங்களை முழுமையாக மதிப்பிட தவறியதாலும், ஒடிசா உயர்நீதிமன்றம் மவுனமாக இருந்து அவரது மேல்முறையீட்டை இரண்டு தசாப்தங்களாகிய பிறகும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாததால் நிரபராதி ஒருவர் தனது வாழ்க்கையில் 22 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். இறுதியாக இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த நபரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம்
நீதிக்காக ஏழை ஒருவர் போராடிக்கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் காரணங்களுக்காக வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்தபோது, நீதித்துறையின் உச்சபட்ச இடமே நீதியை நிலைநாட்டும் வகையில் பிறப்பித்த அரியவகை உத்தரவு தான் இது. ஏற்கனவே சிறையில் 12 ஆண்டுகளை கழித்த நிலையில், அந்த ஏழைக் கைதி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், மேல்முறையீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் கூறி, உயர் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரிக்க மறுத்துள்ளது. மேலும், அந்த முறையீடு அவரது சிறைவாசத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. அப்போது உச்ச நீதிமன்றம். "நமது சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கும். குறிப்பாக அவர்களிலிருந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைப்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது" என்ற வேதனையை பதிவு செய்து இருந்தது.
அதிர்ச்சி அடைந்த உச்சநீதிமன்றம்
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு ,"3,157 நாட்கள் தாமதத்தை மன்னிக்கக் கோரிய மனுவை நிராகரித்து, அதன் விளைவாக, பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை விதித்து வழங்கப்பட்ட தண்டனை உத்தரவுக்கு எதிரான சிறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உத்தரவால் நாங்கள் மிகுந்த ஏமாற்றமும், அதே அளவு கலக்கமும் அடைந்துள்ளோம். ஏனெனில், ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் குற்றவாளி 12 ஆண்டுகளும், தற்போது மேலும் 10 ஆண்டுகளும் என மொத்தம் 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருந்தார்" என்று தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் அதிரடி உத்தரவு
மேலும், “இது சிறைச்சாலை மூலமான மேல்முறையீடு என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரு நடைமுறை கண்ணோட்டத்தையோ அல்லது அனுதாபமான கண்ணோட்டத்தையோ எடுத்திருக்க வேண்டும். மனுதாரர் தனது குற்றவியல் மேல்முறையீட்டை அதன் தகுதிகளின் அடிப்படையில் வாதிடுவதற்கு ஒரு வாய்ப்பாவது அளிக்கும் வகையில். குறைந்தபட்சம் தாமதத்தையாவது மன்னித்திருக்க வேண்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக ஏழைகளின் வீட்டு வாசலுக்கே சட்ட உதவியைக் கொண்டுவரத் தொடர்ந்து பாடுபடும்போது, நாம் ஒரு தாராளமயமான அணுகுமுறையைக் கையாள்வதில் நம்மை உணர்வுபூர்வமாக்கிக் கொள்ள வேண்டும்.. அது வெறும் தாராளமயமான அணுகுமுறையாக இல்லாமல், தாமதத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஒரு செயலூக்கமான அணுகுமுறையாக இருக்க வேண்டும்” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
குற்றச்சாட்டும்.. தீர்ப்பும்..
சாட்சியங்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், நம்பகத்தன்மையற்ற மற்றும் உறுதியற்ற ஒரே ஒரு நேரில் கண்ட சாட்சியின் அடிப்படையில் இது தண்டனை வழங்குவதற்கு உகந்த வழக்கு அல்ல என்று முடிவுசெய்தது. மூன்று கொலை வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்























