CAA: சி.ஏ.ஏ. கீழ் முதல்முறையாக குடியுரிமை பெற்ற மக்கள் - எத்தனை பேருக்கு தெரியுமா?
CAA Certificates: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இன்று குடியுரிமை சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
சிஏஏ கீழ் எத்தனை பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது?
இந்த சட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்த சூழலில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இன்று குடியுரிமை சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, சிஏஏ சான்றிதழ்களை வழங்கினார்.
செயலாளர்கள், இந்திய உளவுத்துறை இயக்குநர் (IB), இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகளும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியாக அடக்குமுறைக்கு உள்ளான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தவர், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வழிவகுக்கிறது.
எந்த வித ஆவணங்களும் இன்றி அவர்களுக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகளின்படி குடியுரிமை பெற ஆறு வகை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்குள் குடியேறி இருக்க வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு எதிரானதா சி.ஏ.ஏ?
அனைவரையும் சமமாக கருதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் விதமாக சி.ஏ.ஏ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. சர்வதேச அளவிலும் இதற்கு எதிராக விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக, சி.ஏ.ஏ திருத்த சட்டம் குறித்து அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது.
"சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இந்திய இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகளால் நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.
குறிப்பாக, புனித மாதமான ரம்ஜானின்போது இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த முற்படுவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இந்திய, அமெரிக்க உறவு ஆழமாகி வரும் நிலையில், மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைத்து தரப்பினரின் மனித உரிமைகளையும் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்குவது முக்கியமானதாக கருதப்படுகிறது" என அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் பென் கார்டின் தெரிவித்தார்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















