"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்கள் வழங்க கோரிக்கை

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்கள் வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பல்வேறு பகுதிகளில் வணிக கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சில உணவகங்கள் உணவு வகைகளை குறைத்து வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களும் சில இடங்களில் தட்டுப்பாடு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில ஹாஸ்டல்கள் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்த கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, தனியார் விடுதிகளுக்கும் வணிக கேஸ் சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
விறகு அடுப்புக்கு திரும்பிய ஹாஸ்டல்கள்?
இதுகுறித்து அசோசியேஷன் தலைவர் அனந்தராமன் பேட்டியளிக்கையில், “ஹாஸ்டல்கள் மூடப்படும் என்று சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை. தற்போதைய சூழலில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் விறகு அடுப்புகள் மூலம் சமையல் செய்து வருகிறோம். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்கள் விடுதிகள் கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளில் சுமார் 1 லட்சம் பேர் தங்கி உள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அரசு வணிக சிலிண்டர்கள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதுபோல் தனியார் விடுதிகளுக்கும் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
மேலும், ஹாஸ்டல்கள் மூடப்படுவதாக வரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தற்போதைய சிக்கல் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















