33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மாநிலங்களவையில் 33 ஆண்டுகளாக மசோதா ஒன்று நிலுவையில் இருக்கிறது. மேலும், என்னென்ன மசோதாக்கள் நிலுவையில் உள்ளது? என்பதை கீழே காணலாம்.

இந்திய நாடாளுமன்றமானது மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு அவைகளை கொண்டது. இதில் மக்களவைக்கு உறுப்பினர்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் முறைப்படி, வாக்காளர்களாக மக்கள் நாம் தேர்வு செய்கிறோம். சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களை அவர்களே எம்பி-களாக தேர்வு செய்து அனுப்புகின்றனர்.
நிலுவையிலே உள்ள மசோதாக்கள்:
மக்களவைக்கு கொண்டு செல்லப்படும் தீர்மானங்கள் அந்த மக்களவைக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவதற்குள் நிறைவேற்றப்படாமல் நிலுவையிலே இருந்தால், அந்த மக்களவையின் பதவிக்காலம் முடிந்தவுடன் காலாவதி ஆகிவிடும். ஆனால், மாநிலங்களவை எப்போதும் சுழற்சி முறையில் உறுப்பினர்கள் வருவதும், செல்வதும் என இருப்பதால் அதன் பதவிக்காலம் முடியாமல் இயங்கிக் கொண்டே இருக்கும். இதனால், அங்கு நிறைவேற்றப்படாமல் சில மசோதாக்கள் நிலுவையிலே உள்ளது.
33 ஆண்டுகள் காத்திருப்பு:
அந்த வகையில், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 33 ஆண்டுகளாக ஒரு மசோதா நிலுவையில் உள்ளது. 1992ம் ஆண்டு மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து 79வது மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த மசோதா ஆகும்.
அப்போது, மக்கள் தொகை கட்டுப்பாடு, குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் செய்து கொண்டிருந்த தருணம். இதனால், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா 2 குழந்தைகளுக்கு மேல் பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அந்த மசோதா பரிந்துரைத்தது. இப்பாேதுள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பலருக்குமே 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வாரிசுகள் உள்ளனர்.
சாத்தியமா?
அந்த தருணத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட வாரிசுகளே இருந்தனர். மேலும், சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரு மனைவிகள் இருந்ததால் அவர்களின் வாரிசுகள் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளின் பதவியும் பறிபோகும் என்பதால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டாலும் பல எம்பி, எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகும். இதனால், இந்த மசோதா எப்போதுமே மாநிலங்களவையிலே நிலுவையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏராளமான மசோதாக்கள்:
இந்த மசோதா மட்டுமின்றி 1997ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட டெல்லி வாடகை திருத்த மசோதா, 2004ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட விதை மசோதா, 2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, வேலைவாய்ப்பு அலுவலக காலியிடம் பற்றிய கட்டா அறிவிப்பு திருத்த மசோதா, 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகளில் பட்டியல், பழங்குடியின சீர்த்திருத்த மசோதா ஆகியவை இன்றளவும் நிலுவையிலே மாநிலங்களவையில் உள்ளது.
இது மட்டுமின்றி பிரதமர் மோடி ஆட்சியில் 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 125வது அரசியலமைப்பு திருத்த மசோதா, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் திருமண பதிவு மசோதா ஆகிய மசோதாவும், 2020ம் ஆண்டு தாக்கல் செய்த பூச்சிக்கொல்லி மசோதா ஆகியவை நிலுவையிலே உள்ளது.
இந்த மசோதக்கள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் ஆகும். இந்த மசோதாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.





















