மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
சென்னை நோக்கி வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது பயணிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகை பொங்கல். பொங்கல் பண்டிகை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்றுடன் முடிவடைகிறது.
சென்னை திரும்பும் மக்கள்:
இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து அனைவரும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் சென்றிருந்தனர். பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்கள் உள்பட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 23 லட்சம் பேர் இந்த பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் தற்போது படிப்படியாக சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.
கட்டண கொள்ளை:
வெளியூர்களில் இருந்து சென்னை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், தனியார் பேருந்துகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் பன்மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை வரும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாகர்கோயிலில் இருந்து சென்னை வரும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைந்தபட்சமே ரூபாய் 4 ஆயிரமாக உள்ளது.
பயணிகள் அவதி:
இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை போன்ற பண்டிகை நாட்களில் இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தனியார் ஆம்னி பேருந்துகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகள் மீது அரசு சார்பில் ஆங்காங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அணிவகுக்கும் வாகனங்கள்:
சென்னைக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணி வகுத்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்துறை தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குவிந்து வருவதால் அந்த இடங்களில் காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.






















