அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட விபத்தை வைத்து காமெடி செய்த காரணத்திற்காக நடிகர் ஜீவா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

நடிகர் ஜீவா நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலகலப்பாக பேசி வரும் ஜீவா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் . கரூரில் தவெக மாநாட்டை தொடர்புபடுத்தி ஜீவாவின் பேச்சு ரசிகர்களிடையெ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதால் சில மாதம் கடந்து வெளியாக வேண்டிய சில படங்கள் இந்த மாதம் வெளியாகின. அந்த வகையில் ஜீவா நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகியது. காமெடி கலந்த டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எல்லா விதமான ப்ரோமோஷனையும் படக்குழு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஊருக்காக சென்று ரசிகர்களை சந்தித்து அவர்களுடம் கலகலப்பாக ஜீவா பேசி வருகிறார். அப்படி ஜீவா எதார்த்தமாக நகைச்சுவையாக சொன்ன காமெடி ஒன்று அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
கரூர் சம்பவம் பற்றி ஜீவா என்ன சொன்னார்?
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜயின் கரூர் அரசியல் பரப்புரையின் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களை பார்த்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் கதறி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 'ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்கப்பா ' என்று அவர் சொன்ன வார்த்தை சமூக வலைதளத்தில் பலரால் மீம்களாக பகிரப்பட்டன. இதே வசனத்தை ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்திலும் வைத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் ஜீவா இதே வசனத்தை நகைச்சுவையாக சொல்லி வருகிறார்.
ஜீவா விளக்கம்
இந்த வசனம் படத்தில் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு ஜீவா பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் " நிறைய பேர் அந்த வசனம் பற்றி என்னிடம் கேட்டார்கள். கதையில் அப்படியான ஒரு சூழல் இருந்தது. அதற்கு ஏற்ற வகையில் இந்த வசமும் அமைந்துவிட்டது. திரையரங்கில் ரசிகர்கள் பார்க்கையில் அது அவர்களுக்கு புதுசா இருக்கும். இந்த விஷயத்தில் சம்பந்தபட்டவர்கள் படத்தை பார்த்துவிட்டார்கள். அதனால் அந்த வசனத்தை நீக்கச் சொல்ல மாட்டார்கள் " என்று அவர் தெரிவித்தார்.
ஜீவாவுக்கு கண்டங்கள்
41 பேர் உயிரிழந்த சோகமான நிகழ்வை ஜீவா தனது படத்தில் நகைச்சுவை வசனமாக வைத்தது மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் அதை வைத்து கேலி செய்து வருகிறார். இது உயிரிழந்தவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளதாக ஜீவாவுக்கு பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள். மேலும் தான் அப்படி பேசியதற்காக ஜீவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.






















