நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை... நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி
யானை ஊருக்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளதால் கோவை மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை விரட்டி தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலைக்கு அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானையின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டுயானை கதிர் நாயக்கன்பாளையம் அருகிலுள்ள ரேணுகாபுரம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது அந்த பகுதியில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அங்கு தங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் வெளியில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதரை விரட்டிய ஒற்றைக் காட்டுயானை
அந்த நேரத்தில் யானையை பார்த்த தொழிலாளி, அருகில் இருந்த தனது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றுள்ளார். இதனை கவனித்த யானை திடீரென அவரை விரட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. யானையிடமிருந்து ஓடி தப்பிய அந்த தொழிலாளி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், யானை ஊருக்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், காட்டு யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை, சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை சேதப்படுத்தி சென்ற சம்பவமும் குறிப்பிடத்தக்கது.






















