![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'செல்பி வித் அண்ணாமலை' போட்டிக்கு அனுமதியில்லை; திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் புகார்
’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்தப்படுவதாக திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
!['செல்பி வித் அண்ணாமலை' போட்டிக்கு அனுமதியில்லை; திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் புகார் Tirupur Chikkanna College Selfie With Annamalai Event Permission Not Granted 'செல்பி வித் அண்ணாமலை' போட்டிக்கு அனுமதியில்லை; திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/2963e02ad3883703e772e73ad87f4f591657872257_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் மாணவர்கள் செல்பி போட்டி நடத்த அனுமதி தரப்படவில்லை எனவும், கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் அக்கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார்.
’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்தப்படுவதாக திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தன. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் இப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் எனவும், பாஜகவில் இணைந்து தேசத்துன் கரங்களை வலுப்படுத்துவோம் எனவும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் செல்பி எடுக்கும் மாணவர்களுக்கு அண்ணாமலையின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை உடனே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விளம்பர போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரியில் கட்சி உறுப்பினர் முகாம் நடத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் அனுமதியின்றி கல்லூரியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும், கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் தரவில்லை எனவும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன், பாஜகவின் வாட்ஸ் அப் விளம்பர செய்தியுடன் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சமூக ஊடகங்கள் (வாட்ஸ் அப்) வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் பெயரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம் எனவும், இந்த நிகழ்விற்கும் கல்லூரிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. மேலும் கல்லூரி வளாகத்தில் எவ்வித அனுமதியும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 19 பாடப்பிரிவுகளில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)