₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road
கோவை மேற்கு புறவழிச்சாலை முதல் கட்டம் திறப்பு – போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலையின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 கிலோமீட்டர் நீளத்தில் மேற்கு புறவழிச்சாலை மூன்று கட்டங்களாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முழுத் திட்டத்திற்காக சுமார் ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புறவழிச்சாலை திறப்பு
இதில் முதல் கட்டமாக மதுக்கரை மைல்கல் பகுதியிலிருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.250 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல் கட்ட சாலை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், கோவை மாநகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தினால் நகருக்குள் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புறவழிச்சாலை திட்டம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார். முதல் கட்டம் திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து பேரூர், சிறுவாணி சாலை மற்றும் மேற்கு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.
மேலும், இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
மேற்கு புறவழிச்சாலை முழுமையாக நிறைவடைந்தால் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.























