கோவை தெற்கில் செந்தில் பாலாஜி வேட்புமனு சர்ச்சை – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி அவர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக கட்சியினர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி உட்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னர் நாம் தமிழர் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, செந்தில் பாலாஜியின் மனுவில் நோட்டரி சான்றிதழ் மற்றும் ஆவண எண்களில் பிழைகள் உள்ளதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, அவர் கோவையில் இருந்தபோதும் கரூரில் நோட்டரி பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரிகள், அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன என்பதால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், சிறிய தவறுகளுக்கே சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்ற நிலையில், சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரம் கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் சூழ்நிலையை மேலும் பதற்றமாக மாற்றியுள்ளது.























