![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு-கைதான அதிகாரியை விசாரிக்க போலீஸ் மனு...!
இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமான படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார்.
![விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு-கைதான அதிகாரியை விசாரிக்க போலீஸ் மனு...! Petition to the police to investigate the officer in the case of sexual harassment of an Air Force officer விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு-கைதான அதிகாரியை விசாரிக்க போலீஸ் மனு...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/08/d82ce928b998c832cbbf86eff88a8d63_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை பந்தய சாலை பகுதியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், ஓய்வுக்காக தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டதாகவும், விமானப் படை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அமித்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் அமித்தேஷ் ஹர்முக் ஆஜர்படுத்தப்பட்ட போது, விமானப் படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமித்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறையினர் பதில் அபிடவிட் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், நீதிமன்ற காவலில் லெப்டினல் அமித்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைக்கப்பட்டார். கடந்த 27 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே அமித்தேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல அமித்தேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 30 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார்.
நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து கடந்த 30ஆம் தேதி அமித்தேஷ் ஹர்முக் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார். மேலும் விமானப்படை அதிகாரிகளிடம் லெப்டினல் அமித்தேஷை ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் விமானப்படை அதிகாரி அமித்தேஷ் ஹர்முக்கினை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கு விமானப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறை விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)