![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Coimbatore Car Blast : கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு : எப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டு இருப்பது என்ன?
ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Coimbatore Car Blast : கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு : எப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டு இருப்பது என்ன? Nia registered a case in connection of coimbatore car blast Coimbatore Car Blast : கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு : எப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டு இருப்பது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/5275658d9bfb2604e3948bb15281a8021666951748069188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அப்சர் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அர்ச்சகர் சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில், 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ ஜெலசின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமியம் பவுடர், சிலிண்டர் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புலன் விசாரணையை தீவிரப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)