சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் கவனம் – கோவை கலெக்டர் கடும் எச்சரிக்கை
தேர்தல் தொடர்பாக தவறான தகவல் பதிவிட்டால் நடவடிக்கை – சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பவன் குமார் எச்சரித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
சமூக வலைதள பதிவுகள் கண்காணிப்பு
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார், நேற்று முதல் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 27,14,676 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், 3,571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்றும் கூறினார். ECINet மொபைல் செயலி மூலம் வாக்காளர்கள் தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும், தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேவையான அனுமதிகளை ஆன்லைன் வாயிலாக பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என்றும், பொதுமக்கள் 1800 250 086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் webcasting வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும், 8,334 Ballot Units, 5,700 Control Units மற்றும் 5,572 VVPAT இயந்திரங்கள் தயாராக உள்ளன என்றும் தெரிவித்தார். மீடியா கண்காணிப்பு குழு (MCMC) மூலம் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மாதிரி வாக்குச்சாவடி (Model Polling Station) அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் 182 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், அவற்றில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், ரூ.50,000 வரை ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட குழுவிடம் ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்தார். சமூக வலைதளங்களும் MCMC கண்காணிப்பில் இருக்கும் என்றும், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். MCMC சான்றிதழ் பெறாமல் எந்த வேட்பாளரின் விளம்பரங்களையும் வெளியிடக் கூடாது என்றும், இது சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அல்லது தவறான தகவல்களை பதிவிட்டால் அது குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். பின்னர் பேசிய மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் 13 தமிழக–கேரள எல்லை சோதனைச்சாவடிகள் உள்ளன என்றும், அவற்றில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாகன சோதனைகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















