குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து... தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மனுக்கள் பெற புதிய ஏற்பாடு
தேர்தல் நடத்தை விதிகள் அமலில்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி அமைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணையைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் நடைபெற்று வந்த சில வழக்கமான நிர்வாக நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரித் துறையின் கீழ், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டி
இதற்கிடையில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு மாற்று ஏற்பாடாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது மனுக்களை தபால் மூலமாக அனுப்பவோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் உள்ள வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்தவோலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை இட்டுச் செல்லலாம் என்றும், அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார் பெட்டி நிரம்பியவுடன் அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக சேகரித்து பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






















