அதிவேகம் உயிருக்கு ஆபத்து – பதபதைக்க வைக்கும் CCTV காட்சி
கோவை எல்என்டி (L&T) பைபாஸ் சாலை, சிந்தாமணி புதூர் அருகே லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ள கோவை சிந்தாமணி புதூர் எல்என்டி பைபாஸ் சாலையில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இடதுபுறமாக முந்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த திமுக கொடிக்கம்பம் மற்றும் நெடுஞ்சாலை கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இருசக்கர வாகனம் வேகமாக லாரியை முந்த முயற்சிக்கும் போது மோதல் ஏற்பட்டு, கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையான ஓட்டமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.























