எச்சரிக்கையை மீறிய கடைகள்... வெள்ளியங்கிரி மலை பகுதியில் திடீர் சோதனை...
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

தென்கைலாயம் என்று போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களைப் பயன்படுத்தி வந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிவராத்திரி மற்றும் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர். அடிவாரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் மலைப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தும் கடைகளுக்கு முன்னதாகவே அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்து நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.
அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி அடிவாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து, அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல்வைத்தனர்.
வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து செல்ல கூடாது என்றும் , மலையேறுவது மிகவும் கடினம் என்பதால் போதிய உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் பயணத்தைத் தொடர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மலையேரும் போது திருச்சியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மலையேறும் பக்தர்கள் இடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தி உள்ளது.























