![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி - வேளாண் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்..!
’’அரியா் தோ்வு எழுதிய மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து, மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்’’
![அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி - வேளாண் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்..! Agricultural University students struggle In connection with the failure of 80 percent of students in the exam அரியர் தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தோல்வி - வேளாண் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/06/ac7f5fae9b8b395c8e6cf2722ef06496_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் இளங்கலை பாடப் பிரிவில் 10 பட்டப் படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக் கழகம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட்டது.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை எனவும், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 50 பேர் கடந்த சனிக்கிழமையன்று பல்கலைக் கழகத்துக்கு வந்தனர். பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு நினைவுக் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தற்கு இணைய வழி நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலைக்கழக நிா்வாகத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “அரியர் தேர்வில் பல்வேறு குழறுபடிகள் நடந்துள்ளன. முறையாக விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை. மாணவர் பெயர் என்ற இடத்தில் ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா என போடப்பட்டு 63 மார்க்குகள் போடப்பட்டுள்ளன. அதேபோல நேரில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை என போடப்பட்டுள்ளது. மாணவர்கள் முறைகேடு செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு கண்காணிப்புகளுடன் தான் தேர்வு நடத்தப்பட்டது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் பெயிலாக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக மாணவர்களை பெயிலாக்கி இருப்பதை ஏற்க முடியாது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)