Kilambakkam Railway Station: இறுதிக்கட்டத்தை நெருங்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள்.. தென்மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்..
Kilambakkam Railway Station Update: "கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது"

Kilambakkam New Railway Station: தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி பல இருப்பதால், வேலை வாய்ப்புகளைத் தேடி சென்னைக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சென்னையில் இட நெருக்கடி காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 15 ஆண்டுகளுக்காக அதிகரித்து வருகிறது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்:
சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக இருந்த, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் 400 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: இனி எல்லாம் ஈஸி தான் ! ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரமாண்டமாக தயாராகும் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் நிலையம் இல்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறையிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. தென்னக ரயில்வே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்றால், நிதி ஒதுக்கப்பட்டு ரயில் நிலையம் உருவாக காலதாமதமாகும் என்பதால், சி.எம்.டி.ஏ பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நேரெதிரில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எங்கே அமைகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ?
வண்டலூர்- ஊரப்பாக்கம் (கூடுவாஞ்சேரி) புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், 3 நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால், பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chromepet Subway: 15 வருட காத்திருப்பு.. தினமும் நெருக்கும் ட்ராஃபிக், ஜிஎஸ்டி சாலைக்கான அணுகல் எளிதாவது எப்போது??
திறப்பு விழா எப்போது?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது. இந்தநிலையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மே மாதம் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையாக ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தாம்பரம் செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த வழித்தடத்தில், 30% வரை கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




















