Chromepet Subway: 15 வருட காத்திருப்பு.. தினமும் நெருக்கும் ட்ராஃபிக், ஜிஎஸ்டி சாலைக்கான அணுகல் எளிதாவது எப்போது??
Chromepet Subway Project Details: குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதைக்கான பணிகள் சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

Chromepet Subway Project Details: குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கான பதில் நீண்ட காலமாகவே நிலைவையில் உள்ளது.
குரோம்பேட்டை சுரங்கப்பாதை திட்டம்:
பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தான், கடந்த 2006ம் ஆண்டு சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதாநகரில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கிழக்கு குரோம்பேட்டையில் வசிப்பவர்கள் கிராண்ட் சதர்ன் ட்ரங்க் (ஜிஎஸ்டி) சாலையை எளிதாக அணுகவும், ஆபத்தான மற்றும் சிரமமான லெவல் கிராசிங் 27 ஐத் தவிர்க்கவும் இந்த வாகன சுரங்கப்பாதை திட்டமிடப்பட்டது.
மாற்றப்பட்ட சுரங்கப்பாதை வடிவமைப்பு:
SDNB வைஷ்ணவா கல்லூரி அருகே பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் தான் முதலில் சுரங்கப்பாதை வடிவமைக்கப்பட்டது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வந்தன. ரயில்வே வாரியம் மற்றும் மாநில நெடுஞ்சலை ஆணையம் சேர்ந்து, சுமார் 4.5 கோடி செலவில் சுரங்கப்பாதையை அமைக்க 2009ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், நில கைப்பற்றுவதில் சிக்கல் மற்றும் ரயில்வே அனுமதி போன்ற காரணங்களால் பணிகள் தாமதமாகின. தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், கார்கள், பைக்குகள் மற்றும் சிறிய பேருந்துகளும் பயணிக்கும் வகையில் சுரங்கப்பாதையை வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தமும் வழங்கப்பட்டது.
இழுபறியில் பணிகள்:
புதிய வடிவமைப்பின்படி, சுரங்கப்பாதையை கட்டிமுடிக்க 24 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அதனடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, 75 சதவிகிதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஒருவழிப்பாதையாக இருந்த சுரங்கப்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்ற, பொதுமக்களின் கோரிக்கையை அப்பகுதி எம்.எல்.ஏ., கருணாநிதியும் வலியுறுத்துகிறார்.
சுரங்கப்பாதை அகலத்தை விரிவுபடுத்த கூடுதல் நிலம் கிடைத்தால் மட்டுமே திட்டத்தின் முழு நோக்கத்தையும், பலனையும் அடைய முடியும். இதற்காக ரயில்வே நிலத்தில் 3 மீட்டர் அகலத்திற்கு 30 மீட்டர் நீளம் வரை நிலம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கோரிக்கைக்கு ரயில்வே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அம்ரித் திட்டத்தின் கீழ் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் தெற்கு ரயில்வேயின் திட்டத்தால், சுரங்கப்பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
இப்படி 15 ஆண்டுகளாக தொடரும் இழுபறிக்கு, முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அட்க்ஹைதொடர்ந்து, டிசம்பர் மாதத்திற்கு பணிகள் முடியும் எனவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரையிலும் பணிகள் முடியாமல், கடந்த சில வாரங்களாக எந்த பணியும் நடைபெறவே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, கட்டுமான பணிகள் நடைபெறும் போது மாலை நேரங்களில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜிஎஸ்டி சாலை அணுகல் எளிதாகுமா?
ராதா நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலையை எளிதாக அணுகும் வகையில் தான் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுக்கிறது. குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியை, தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
ரயில் கடக்கும்போது ஒவ்வொருமுறை கேட் மூடும்போதும், ஜி.எஸ்.டி., சாலை, ராதா நகர் சாலையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுரங்கப்பாதை இல்லாமல், ஒரு ரயில் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் வாகன ஓட்டிகள் தாமதங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது. இதனால் ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம் மற்றும் ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் மாணவர்கள் தினசரி இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து, அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

