![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
நெடுஞ்சாலை துறை டெண்டரில் இபிஎஸ் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மனு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
![நெடுஞ்சாலை துறை டெண்டரில் இபிஎஸ் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மனு Former chief minister eps highway irregularities case proof has been submitted in chennai highcourt நெடுஞ்சாலை துறை டெண்டரில் இபிஎஸ் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மனு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/19/4c1ab0b1d229ac55c849825d42b2c11d1660915498146102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.
இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விதிமுறைகளை பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது அவதூறு இல்லை எனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் ஏதேச்சதிகார போக்கும், ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புகார் அளித்ததற்காக அவதூறு வழக்கு தொடர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளதால், மான நஷ்ட ஈடுக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 23ம் தேதி தள்ளி வைக்கபட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)