Chennai One App: ஒரே ஆப்-ல் பேருந்து, மெட்ரோ, ரயில் டிக்கெட்! இனி போக்குவரத்து சிக்கல் இல்லை! துவக்கி வைக்கும் முதல்வர்
சென்னை ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) சென்னை ஓன் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது, இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.

இ. நாட்டிலேயே முதல்முறையாக, பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில், ஆட்டோ, கேப் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்தையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைக்கும் “சென்னை ஒன்” (Chennai One) மொபைல் செயலி இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.
இந்த செயலியை, சென்னை ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) உருவாக்கியுள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
இத்துடன், நகரின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்களுக்கு வழிகாட்டும் முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan - CMP) என்பதையும் முதல்வர் அங்கீகரிக்க உள்ளார். இந்தத் திட்டம் நகரின் போக்குவரத்தை சுற்றுச்சூழல் நட்பு, மக்கள் மையப்படுத்தப்பட்ட, தடையற்ற முறையில் வளர்ச்சியடைய செய்வதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘ஒரே நகரம், ஒரே டிக்கெட்’ (One City, One Ticket) என்ற அம்சமே இந்த முயற்சியின் முக்கிய கருவாகௌம். அதாவது, ஒரே QR குறியீட்டில் உள்ள டிக்கெட்டை பயன்படுத்தி, பயணிகள் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், ஆட்டோ, கேப் என எந்த போக்குவரத்திலும் பயணம் செய்ய முடியும். இனிமேல் ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனியாக வரிசையில் நிற்கவோ, டிக்கெட் வாங்கவோ தேவையில்லை. இது நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கிறது.
மேலும், ரியல்-டைம் அப்டேட்ஸ் மூலம் பேருந்து, ரயில் எப்போது வருகிறது, எப்போது செல்கிறது என்பதை பயணிகள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடலாம்.
UPI மற்றும் பிற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் டிக்கெட்டுகளை நேரடியாக வாங்கும் வசதி உள்ளது. இதன் மூலம் ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்து, டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலும் தணியும்.அனைத்து மக்களையும் இணைப்பதற்காக, ஆப் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கிறது.
இந்த ஆப், பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும். தனியார் வாகனப் பயன்பாடு குறைந்தால், போக்குவரத்து நெரிசலும் காற்று மாசும் குறையும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
தினசரி கோடிக்கணக்கான பயணங்கள் நடைபெறும் சென்னைக்கு, இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து தளம் ஒரு ‘கேம்-செஞ்சர்’ ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. “சென்னை ஒன்” செயலி மற்றும் முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தொடக்கத்தின் மூலம், போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.




















