“மெளன சாமி, பாஜகவிற்கு எடுபிடி” - இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்த வைகோ
பாஜகவுக்கு எடுபிடி போல் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி மெளன சாமியாக நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என வைகோ விமர்சனம்.

மதிமுக பொதுக் கூட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி
பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ;
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நேற்று உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து பாஜக - அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டது. பாஜக தமிழ்நாட்டு தலைவராக நயினார் நாகேந்திரன் அவர்களை அறிவித்துள்ளார்கள்.
ஆனால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் உடன்பாடு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அண்மையில் தான் சொன்னார். பாஜக செயல்பாடுகளை விமர்சனம் செய்து பேசினார்.
ஆனால் அவர் டெல்லிக்கு சென்றார், செங்கோட்டையன் இருமுறை சென்றார். இப்போது அதிமுக தலைமையில் கூட்டணி என்கிறார்கள். ஆனால் இந்த அறிவிப்பின் பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மௌன சாமியாக இருந்த எடப்பாடி பழனிசாமி
கூட்டணிக்கு தலைவர் என்கிற முறையில் ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் , அதுதான் கூட்டணிக்கு ஆரோக்கியமானதாகவும் உண்மையான கூட்டணி அமைவதாகவும் இருந்திருக்கும். மெளன சாமியாக பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டு இருந்தார்.
தமிழ்நாட்டுக்கு சாதகமாக எந்த முடிவுகளை எடுக்கவில்லை. இந்த கூட்டணி நீடிக்குமா ? இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா என்று தெரியவில்லை.
பாஜகவுக்கு எடுபிடி போல் தான் இருந்துகொண்டு நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்களே தவிர அதிமுக சார்பில் ஒருவர் கூட பேசவில்லை.
இந்த கூட்டணி நீடித்தாலும் , உடன் சில கட்சிகள் சேர்ந்தாலும் திமுக தலைமையில் உள்ள நம் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும் 234 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன் வைத்து , வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற, மதிமுக சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் கடைசி வரை திமுக கழகத்திற்கு அரணாக இருப்பேன் என்று கலைஞரிடம் நான் பேசி உள்ளேன் என்று பலமுறை சொல்லி உள்ளேன்.
நாம் எடுத்த முடிவில் சஞ்சலம் எதுவுமில்லாமல் தெளிவாக உள்ளோம், ஆளும் அரசுக்கு எதிராக எதுவும் நாம் பேசவில்லை. இந்த ஆர்ப்பாட்டமும் நடத்தவில்லை , மற்ற கட்சிகள் தனித்தனி கட்சிகள் நாம் திமுகவில் அங்கமாக இருந்தவர்கள். மற்ற கட்சிகள் வெளியில் இருந்து வருபவர்கள்.
நாம் கூட்டணியில் இருப்பதற்கும் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் 100 விதமான அர்த்தங்கள் கற்பிக்க பலர் தயாராக இருக்கும் காரணத்தால் எச்சரிக்கையுடன் நம் பங்கு இந்த கூட்டணியில் செலுத்த வேண்டும்.
வேறு எந்த தொழிற்சங்கத்திற்கும் செல்ல மாட்டோம் மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கத்தில் தான் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தொடர்ந்து செயல்படும் உங்களுக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பங்களிப்பு தேர்தலில் மிகப்பெரிய அளவில் இருக்கும் நீங்கள் லட்சியவாதிகள் கொள்கைக்காக பாடுபடுபவர்கள் அந்த வகையில் தொழிலாளர் தோழர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும் என்று அன்போடு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

