SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏதுவாக, சென்னை மாநகராட்சியின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சென்னையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் தங்கள் விவரங்களை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கும் விதமாக, சென்னை மாநகராட்சியின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், டிசம்பர் 20 மற்றும் 21-ம் தேதிகளில், அதாவது இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் SIR பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்ற வாக்கு மைய நிலை அலுவலர்கள், விண்ணப்ப படிவங்களை வழங்கினர். அந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம், டிசம்பர் 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டுட்டிருந்தது.
பின்னர், கால அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 14-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சென்னையில் நீக்கப்பட்ட 14.25 லட்சம் வாக்காளர்கள்
அதன்படி, டிசம்பர் 19-ம் தேதியான நேற்று, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு, சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது, சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் பெயரை சேர்க்க வாய்ப்பு
இந்நிலையில், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்கள் பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை, வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதில், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளின் பட்டியலில் இடம்பெற்ற தங்கள் பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்.
அந்த தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில், அதற்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதில், ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படிவம் 6-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம்.
அதோடு, இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும், படிவம்-8 கொடுக்க வேண்டும்.
சென்னையில் சிறப்பு முகாம்
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், அதாவது, டிசம்பர் 20 மற்றும் 21-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















